காடை பொரியல்

  • காடை - 2
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 2
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
  • கறி மசாலா தூள் - அரை மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • புதினா - 2 கொத்து
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - கால் கப்
காடையின் சதை பகுதியை வைத்து செய்யவும். காடையை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கவும்.பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் கிளறவும்.

அதன் பிறகு சுத்தம் செய்த காடை துண்டுகளை போட்டு உப்பு மற்றும் புதினா தழை போட்டு ஒரு நிமிடம் நன்கு மசாலா காடையுடன் சேரும்படி பிரட்டி விடவும்.அதில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி ஒரு முறை நன்கு கிளறி விட்டு ஒரு தட்டை வைத்து மூடி காடையை வேக வைக்கவும்.

5 நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி விடவும். பிறகு 7 நிமிடம் கழித்து திறந்து கிளறி எண்ணெய் வெளி வந்து திக்காக ஆனதும் 2 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.சுவையான காடை பொரியல் ரெடி. இதை நெய் சாதம், பிரியாணியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலே புதினா இலையை தூவி பரிமாறவும்.

Comments